பிதற்றுவதை நிறுத்துக, பிகேஆர்-க்கு அம்பிகா வலியுறுத்து

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, துன் டாக்டர் மகாதிர் முகமட் அந்தக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளதன் அடிப்படையில், வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் பிகேஆரை விமர்சித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியின் அடிப்படையில், மலேசியாகினியின் கட்டுரையைப் பற்றிக் கருத்து தெரிவித்த முன்னாள் பெர்சே தலைவரான அம்பிகா, “பி.கே.ஆர் இம்மாதிரியான முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்,” என்றார்.

இப்பிரச்சினை தொடர்பில், எஃப்.எம்.டி. கட்டுரையில் அவர் கூறியதாவது: “நான் பிரதமரின் நியமனத்தை முழுமையாக ஆதரிக்கிறேன், தயவுசெய்து வேறு பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, நாட்டிற்கு முக்கியத்துவம் தாருங்கள். மக்களே அவ்வாறுதான் செய்துள்ளனர்!” என்றார்.

இன்று மாலை, செய்தியாளர் மாநாட்டில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-ஐ நிதியமைச்சராகவும், அமானா தலைவர் முகமட் சாபுவைப் பாதுகாப்பு அமைச்சராகவும் முஹிடின் யாசினை உள்துறை அமைச்சராகவும் மகாதீர் நியமித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அமைச்சர்களை யாங் டி-பெர்த்துவான் அகோங் பிரதமரின் ஆலோசனையுடன் நியமிக்கலாம்.

ஆயினும், மகாதிர் இந்த விஷயத்தில் பிகேஆருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ரஃபிசி கூறினார்.

பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் இருப்பதால், இந்த நியமனங்கள் இறுதி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.