பிஎன் உதாரணத்தைப் பின்பற்றி, எதிர்க்கட்சிகளுக்கு ஜொகூர் அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகள் இல்லை

எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவர்களை அங்கீகரிக்கவில்லை, அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடுகளை வழங்கவில்லை என ஜொகூர் மாநில அரசை பக்காத்தான் ஹராப்பான் குறைகூறி வந்துள்ளது.

இப்போது பிஎன் எதிர்க்கட்சியாகிவிட்டது, ஹராப்பானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மந்திரி பெசார், ஓஸ்மான் சப்பியன் அந்தக் கொள்கையை மாற்ற தயாராக இல்லை என்று தோன்றுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களைப் புதிய மாநில அரசாங்கம் அங்கீகரிக்குமா என்று கேட்டதற்கு, பதில் கூறுவதற்கு முன்னர், அவருக்கு அடுத்து உட்கார்ந்திருந்த ஜொகூர் மாநில அமானா தலைவர் அமிநோல்ஹுடா ஹஸ்சானின் கருத்தைக் கேட்டார் ஒஸ்மான்.

“நாங்கள் அதைப் பரிசீலிக்க வேண்டும், அதிகாரப்பூர்வமாக அவர்களை நியமிக்கும் முன்னர், நிதி நிலைப்பாட்டை நாங்கள் கவனிக்க வேண்டும், எங்களுக்கு மற்ற கடமைகள் இருக்கிறது.

“மாநிலத்துடன் ஒப்பிடும்போது, மத்திய அரசின் நிலை வேறுபட்டது, நாம் 100 விழுக்காடு மத்திய அரசைப் பின்பற்ற முடியாது,” என்று இன்று, ஜொகூர் பாருவில் நடந்த ஊடக மாநாட்டில் அவர் கூறினார்.

பிகேஆர், டிஏபி பிரதிநிதிகள் ஊடக மாநாட்டில் இல்லை.

எதிர்க்கட்சியினருக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்படுமா, என்று கேட்டதற்கு, “இது ஆளும் அரசாங்கத்தின் உரிமை. பிஎன் ஆட்சியின் போது உங்களுக்குக் கிடைத்ததா?” என்று அவர் அமிநோல்ஹுடாவிடம் கேட்டதற்கு, பாரிட் யானி சட்டமன்ற உறுப்பினருமான அமிநோல்ஹுடா, “இல்லை,” என்று பதிலளித்தார்.

“ஆக, நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும்? இது அவர்களுக்குத் தோட்டாவைக் கொடுப்பது போன்றது.”

‘அம்னோவின் மறுசுழற்சி’ என்று கூறப்படுவது பற்றி கேட்டதற்கு, “நீங்கள் ஏன் துன் பற்றி பேசவில்லை? நான் முன்பு அம்னோ, ஆனால் இப்போது ஹராப்பான் முடிவுகளை நான் பின்பற்ற வேண்டும்.

பெர்சத்து மற்றும் ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் செயலாளருமான ஒஸ்மான், அம்னோவில் இருந்தபோது, 1999-ல் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார், 2013-ம் பொதுத் தேர்தலில் நீக்கப்படும் முன்னர்.