செத்தி: 100 நாளில் ஜிஎஸ்டிக்கு முடிவுகட்டப்போவது எப்படி என்பதை விளக்குவோம்

பக்கத்தான்  ஹரப்பான்   வாக்களித்தபடி   முதல்   100  நாளில்   பொருள்,  சேவை   வரியை   இரத்துச்   செய்ய  முடியாமல்   போகலாம்.

ஆனாலும்,  ஜிஎஸ்டியை  ஒழிப்பதற்கு    என்னென்ன   நடவடிக்கைகள்    எடுக்கப்படும்    என்பது   100  நாள்களில்    அறிவிக்கப்படும்.   பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டால்   நியமிக்கப்பட்ட   ஐவரடங்கிய   ஆலோசனை   மன்றத்தின்  உறுப்பினர்களில்   ஒருவரான   செத்தி   அக்டார்   அசீஸ்   இதனைத்  தெரிவித்தார்.

“பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   பலமுறை   சொல்லியிருக்கிறார்,   நாட்டின்    சட்டப்படிதான்     எல்லாம்    செய்யப்படும்  என்று.  எனவே  நாங்கள்  மாற்றங்களைக்  கொண்டுவரும்  முயற்சியில்    சட்டங்களிலிருந்து   விலகப்  போவதில்லை”,  என்றாரவர்.

இப்போதைக்கு   ஆலோசனை   மன்றம்  மக்களின்   வாங்கும்   சக்தியை   மேம்படுத்துவதற்கான   வழிமுறைகளை   ஆராய்ந்து    வருவதாக     செத்தி    கூறினார்.  முன்னாள்   பேங்க்  நெகாரா   கவர்னரான   செத்தி,     இன்று  180  நிதி   நிர்வாகிகளைச்   சந்தித்துப்    பேசினார்.

ஜிஎஸ்டி  இரத்து   என்பது   முடிந்த  முடிவு   என்பதை    வலியுறுத்திய     அவர்,  அதை   எப்படிச்   செயல்படுத்துவது    என்பதே   இப்போதைய  பிரச்னை   என்றார்.

“100  நாளுக்குள்   அறிவிப்போம்…….அதன்  மூலம்    என்ன    செய்யப்போகிறோம்,  அதை    எப்படிச்   செய்யப்போகிறோம்  என்பதை  மக்கள்   தெரிந்து  கொள்வார்கள்”,  என்றாரவர்.