எதிர்க்கட்சியாக மாறுவோம் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை

14வது  பொதுத்   தேர்தலுக்கு   முந்திய   நிலவரங்களை   நினைவுகூர்ந்த   ஜோகூர்   எதிர்க்கட்சித்    தலைவர்  ஹஸ்னி    முகம்மட்,   வாக்களிப்பு  நாள்வரை   ஆட்சிமாற்றம்   நிகழும்   என்பதற்கான   அறிகுறியே  இல்லை  என்றார்.

சில  இடங்கள்   குறையும்   என்றுதான்  அம்னோ  நினைத்திருந்தது.  ஆட்சியே   மாறும்  என்பதை    எதிர்பார்க்கவில்லை.

“மாநில   அரசை   நல்ல  முறையில்   நிர்வாகம்   செய்து  வந்தோம்,  எனவேதான்   வெற்றிபெறுவோம்   என்று    நம்பினோம்.

“ஆனால்,  எதிர்க்கட்சியாக  மாறுவோம்   என்பதை   நினைத்துக்கூட    பார்க்கவில்லை”,  என  ஹஸ்னி   மலேசியாகினிக்கு    வழங்கிய   நேர்காணலில்   கூறினார்.

பாரிசான்   நேசனல்   தோல்விக்குப்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்தான்   காரணமா    என்று  வினவப்பட்டதற்கு  அம்னோ   உறுப்பினர்   அனைவருமே  அதற்குப்  பொறுப்பு  என்றார்.

அதே  நேரத்தில்   நஜிப்   அம்னோ  மற்றும்   பிஎன்   தலைவர்  பதவியிலிருந்து  விலகியதையும்    அவர்   வரவேற்றார்.

2008 பொதுத்   தேர்தலில்   பிஎன்னுக்கு   ஏற்பட்ட   பின்னடைவையை    அடுத்து   அப்துல்லா  அஹமட்   படாவி  பதவிவிலகக்  கோரிக்கை  விடப்பட்டதை   அவர்   சுட்டிக்காட்டினார்.

“அப்போது (நாடாளுமன்றத்தில்  மூன்றில்  இரண்டு   பங்கு)  பெரும்பான்மையைத்தான்   இழந்தோம்.  அதற்கே   பாக்  லா  விலக   வேண்டும்   என்று  வலியுறுத்தப்பட்டது. இப்போது   மத்தியிலும்   மாநிலங்கள்  பலவற்றிலும்   ஆட்சியே  மாறியிருக்கிறது.

“நஜிப்  விலகத்தான்   வேண்டும்   என்பதைச்  சொல்ல  வேண்டியதில்லை”,  என்றார்.

மாநில  அரசு  பிரச்னைகள்   எதையும்    எதிர்நோக்கவில்லை    என்று  கூறிய  ஹஸ்னி  மத்தியில்தான்  பிரச்னைகள்    என்றார்.

“கூட்டரசு   நிலையில்  1எம்டிபி,  மாரா,  பெல்டா,  தாபோங்  ஹாஜி  போன்ற  விவகாரங்களைச்  சமாளிக்க  இயலவில்லை.  இவை   கூட்டரசு  அரசாங்க   பிரச்னைகள்.  என்றாலும்,    ஜோகூர்   வாக்காளர்களையும்  பாதித்தன.

“மக்கள்   பல  ஆண்டுகளாக  வேலை  கிடைக்கவில்லை  என்பதற்காகவோ,  பிடிபிடிஎன்  கடனைத்   திருப்பிக்   கொடுக்க  முடியவில்லை   என்பதற்காகவோ  உண்பதற்கு  உணவில்லை   என்பதற்காகவோ    (ஹரப்பானுக்கு)  வாக்களிக்கவில்லை.

“விவகாரங்கள்  சரியான   முறையில்   கையாளப்படவில்லை,  அது   வாக்காளர்களுக்குப்  பிடிக்கவில்லை”, என்று  ஹஸ்னி   கூறினார்.