தெங்கு ரசாலி அம்னோவுக்குப் பொறுப்பேற்க ஆதரவு குவிகிறது

வார    இறுதியில்    கேட்கப்பட்டபோது   தெங்கு   ரசாலி,     ஜூன்  23  அம்னோ  கட்சித்  தேர்தலில்    தலைவர்  பதவிக்குப்   போட்டியிடுவது   குறித்து   இன்னும்   பரிசீலித்துக்   கொண்டிருப்பதாகக்  கூறினார்.

அதன்  பின்னர்  பார்த்தால்   பல    தரப்பினரும்   81-வயது  நிரம்பிய   ரசாலிதான்   அம்னோ   தலைவராவதற்குப்    பொருத்தமானவர்   என்று   குரல்  கொடுக்கத்   தொடங்கி  விட்டனர்.

அவரது   குவா  மூசாங்  அம்னோ    தொகுதியைப்   பொறுத்தவரை,  14வது   பொதுத்   தேர்தலில்   தோல்வி  அடைந்த  பிஎன்னைத்  தூக்கி   நிறுத்த    தெங்கு  ரசாலியை  விட்டால்  வேறு   ஆள்   இல்லை   என்று  உறுதியாககக்  கூறுகிறது.

அத்தொகுதியைச்   சேர்ந்த   மஹமட்   நாபி   நாசிர்,  குலீ    என்ற  பெயரில் பிரபலமாக   விளங்கும்    தெங்கு   ரசாலி  கறைபடியாத  கரங்களுக்குச்   சொந்தக்காரர்        என்பதால்    அவரால்   அம்னோ   உறுப்பினர்கள்   ஊக்கம்  பெறுவார்கள்    என்றார்.

“மலாய்க்காரர்களை  ஒன்றிணைப்பதுடன்   1எம்டிபியுடன்   சம்பந்தப்படாதவர்  என்பதால்   அவ்   விவகாரத்தையும்   அவரால்   சமாளிக்க   முடியும்”,  என்றவர்  சொன்னதாக   சினார்  ஹரியான்   கூறியது.

அதே  போன்ற   கருத்தைத்   தெரிவித்த      அத்தொகுதி   செயல்குழு  உறுப்பினரான   வான்  ஸவாவி    ஜைன்,   அம்னோ    தலைமைத்துவத்தில்   நிலவும்    வெற்றிடத்தை   நிரப்ப    தெங்கு   ரசாலியே    பொருத்தமானவர்  என்றார்.

“அம்னோ  தலைமைத்துவம்  முழுவதுமே   ஒரு   தலைவரைத்  தேடுகிறது.  அவர்   கிடைக்கும்வரை    தெங்கு   ரசாலி      அந்த  வெற்றிடத்தை  நிரப்ப   வேண்டும்   என்று    பலரும்  விரும்புகிறார்கள்”,   என்றார்.