ஜிஇ14 கேமரன் மலை முடிவு மீதில் சவால்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், பிகேஆர் வேட்பாளர் எம்.மனோகரன் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மனோகரன், 59, சி.சிவராஜ்-க்கு எதிராக, குமார் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கை தாக்கல் செய்தார்.

பூர்வக்குடி மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, சிவராஜ் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்துள்ளார், இது தேர்தல் குற்றச்சாட்டுகள் சட்டம் 1954-ன் படி குற்றம் என்பதால், மே 9, ஜிஇ14 முடிவுகள் இரத்து செய்யப்பட வேண்டுமென மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெலாய் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய பகாங் மந்திரி பெசாருமான வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்-உடன் இணைந்து, ஒராங் அஸ்லி வாக்காளர்கள், பிஎன்னுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய RM30-லிருந்து RM1,000 வரையில், தோக் பாத்தின்கள் வழி (கம்பத்து தலைவர்கள்) இலஞ்சம் கொடுக்க, சிவராஜ் முயன்றுள்ளதாக மனோகரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

11-வது பொதுத் தேர்தலில் இருந்து, தொடர்ந்து 3-வது தவணையாக ஜெலாய் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள வான் ரொஸ்டி, அப்பகுதியில் நன்கு அறிமுகமானவர். அவர் மூலமாகவே, பூர்வக்குடி மக்களுக்குச் சிவராஜ் அறிமுகமானார், காரணம் அம்மக்கள் வெளியூர் ஆட்களைச் சுலபத்தில் நம்புவது கிடையாது என மனோகரன் மேலும் கூறியுள்ளார்.

14-வது பொதுத் தேர்தலில், சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் 10,307 வாக்குகளைப் பெற்று, சக வேட்பாளர்கள் நால்வரை வென்றார்.