நெகிரி மாநிலத்திற்குக் கிடைத்த அதிர்ஷ்டம், எதிர்காலப் பிரதமர்  போர்ட்டிக்சனில் போட்டியிடுவது, சேவியர் கூறுகிறார்

 

கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. கெஅடிலான் நாட்டில் பாகுபாடற்ற ஜனநாயகத்துக்கு, உண்மைக்கு, நேர்மைக்கு மட்டும் போராடவில்லை, தியாகத்தின் அர்த்தத்தையே மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அதன்  இத்தொகுதியின் கெஅடிலான் நாடாளுமன்ற நடப்பு உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா மற்றும் அங்கு போட்டியிடவிருக்கும் அன்வார்  இப்ராஹிம் ஆகியோரின் செயல்கள் இருக்கின்றன என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

பக்காத்தான் ஹராப்பானின் 113 தொகுதிகளில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளைத் தன் வசம் வைத்துள்ள கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு மூலக்காரணமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நீதிக்காகத் தன்னையே அர்பணித்து, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போராடியவர், அப்படியிருக்க  அவர் போட்டியிடுவதை எவர் குறை சொல்லமுடியும் என்று கேட்கிறார் சேவியர் ஜெயக்குமார்   .

அன்வார்  இப்ராஹிம் தேர்தலில் போட்டியிடப் பல தொகுதிகள் வழங்கப்பட்டாலும் அவர் போர்ட்டிக்சனில் போட்டியிட அத்தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல சிறப்பு காரணங்கள் இருக்கலாம். அது ஒரு பல்லினத் தொகுதி என்பதுடன் நெகிரி மாநிலத்தின் வளம் சிறப்பாகக் கையாளப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

மிக வேகமாக வளர்ச்சியடையும் சிலாங்கூர் மாநிலத்துக்கு அருகில் இருக்கும் நெகிரி மாநிலம் மற்றும் போர்ட்டிக்சன் நகரின் வளர்ச்சி இதுவரை போற்றத்தக்கதாக அமையவில்லை. ஆனால், ஆற்றல் நிறைந்த ஒரு தலைவரின் வழிகாட்டலில், ஒரு நாட்டின் பிரதமரின் தொகுதி என்ற ரீதியில் போர்ட்டிக்சனும் நெகிரி மாநில மக்களும் பயனடைய, வளர்ச்சிக்கான நிறைய வாய்ப்புண்டு என்பதால்   அன்வார்  இப்ராஹிமைத் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இராணுவ வீரர்கள் எப்பொழுதும் தியாகச் சின்னங்களே! அதனை நிருபிக்கும் வண்ணம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சித் தலைவருக்காக விட்டுக் கொடுக்க முன்வந்துள்ள நடப்பு எம்பி டேனியல் பாலகோபல் அப்துல்லா ஓர் உண்மையான, நேர்மையான கடற்படை அதிகாரி என்பதை நாட்டுக்கு நிரூபித்து விட்டார். தனக்கு வாக்களித்த மக்கள் நல்ல பயனை அடைய வேண்டும் என்பதற்காக, எதிர்காலப் பிரதமரையே தனது தொகுதிக்கு, வேட்பாளராக்கிய பெருமை டேனியல் பாலகோபல் அப்துல்லாவைச் சாரும்.

பொதுத்தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இடைத்தேர்தல் என்ற குறைபாட்டினைத் தவிர்க்க அனைவருக்கும் ஆசைதான், ஆனால் சிலாங்கூரில் ஏற்பட்ட திடீர் மரணங்களால் இடைத்தேர்தலைத் தவிர்க்க முடியவில்லை. அதனைச்  சரி செய்யும் ஒரு வழி முறையாக, சிலாங்கூர் மக்களுக்கு மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தாமலிருப்பதை உறுதிப்படுத்தவே அன்வார் நெகிரி மாநிலத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளது தெரிகிறது,

நாடும், மக்களும் அறியும் வண்ணம், அன்வார்  இப்ராஹிம்  இடைத்தேர்தல் வழி மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரப்படுவார் என்று பக்காத்தான் ஹராப்பான் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்ததையும் வாக்காளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆக, இந்த இடைத்தேர்தலை மக்கள் ஓர் இடராக எண்ணாமல், மாற்றத்தின் ஓர்  அங்கமாக, நெகிரி மாநில முன்னேற்றத்திற்கான ஒரு மார்க்கமாக ஏற்று தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அன்வார் இப்ராஹிமுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் வழங்க வேண்டும் என்று  டாக்டர் சேவியர் கேட்டுக்கொண்டார்.