போர்ட் டிக்சனில் அம்னோ போட்டியிடாது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஆருடம்

பிகேஆரின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரவி, போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ அதன் வேட்பாளரைக் களமிறக்காது என்கிறார்.

மாறாக, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு எதிராக அங்கு பாஸ்தான் களமிறங்கும் என்றவர் நினைக்கிறார்.

“என் கணிப்பு அம்னோ விலகிக் கொள்ளும், பாஸ் களமிறங்கும்”, என்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது ரவி கூறினார்.

ஸ்ரீ தஞ்சோங், போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. சுவா, லுக்குட், பாகான் பினாங், லிங்கி ஆகியவை அதனுள் அடங்கிய மற்ற சட்டமன்றத் தொகுதிகளாகும்.

14வது பொதுத் தேர்தலில் ஹரப்பான் ஸ்ரீதஞ்சோங், சுவா, லுக்குட் ஆகியவற்றைத் தக்க வைத்துக்கொண்டது. லிங்கியிலும் பாகான் பினாங்கிலும் பிஎன் வென்றது.

“உள்ளூர் வாசி என்ற முறையில் , போர்ட் டிக்சன் அம்னோவுக்குப் பிரச்னை மிகுந்த ஒரு தொகுதி என்பேன்.

“போர்ட் டிக்சனில் அம்னோ இரண்டு முகாம்களாக பிரிந்து கிடக்கிறது. ஒன்று முகம்மட் ஹசானுக்கு ஆதரவானது மற்றொன்று ஈசா சமட்டை ஆதரிப்பது. இவ்விரு முகாம்களும் கட்சி சம்பந்தப்பட்ட தேர்தல்களில் ஒன்று மற்றொன்றைப் புறக்கணிப்பதே வாடிக்கையாகி விட்டது”, என்றார் ரவி.