பிடி-யில் மகாதிர், மகிழ்ச்சியில் அன்வார்

 

பிரதமர் மகாதிர் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் தமக்காக பரப்புரை செய்ய வருவது குறித்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மகாதிரே வருகிறார். நான் இன்று மகிழ்ச்சி அடைகிறேன். இது போர்ட்டிக்சன் மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றாரவர்.

இது முக்கியமானது ஏனென்றால் மகாதிர் பிரதமராக இருந்த போது அவர் பரப்புரைக்குச் செல்வதில்லை. நான் துணைப் பிரதமராக இருந்த போது இது தெரியும் என்றார் அன்வார்.

ஆனால், அவர் இங்கு வருகிறார். போர்ட்டிக்சனுக்கு இது ஒரு நல்ல சகுனம். இதன் பொருள், போர்ட்டிக்சனுக்கு உதவ நான் மட்டும் உத்தரவாதமளிக்கவில்லை. பிரதமர்கூட இங்கு இருப்பார் என்று அன்வார் மேலும் கூறினார்.

அக்டோபர் 8-இல், தாம் இதர பக்கத்தான் தலைவர்களுடன் போர்ட்டிக்சனுக்கு சென்று அன்வாருக்கு பரப்புரை செய்வேன் என்று மகாதிர் இன்று முன்னேரத்தில் அறிவித்தார்.

தாம் இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணம் எங்களிருக்கிடையே பிளவு இருப்பதாக கூறப்படும் ஊகத்தை அகற்றுவதாகும் என்று மகாதிர் விளக்கமளித்தார்.

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் அக்டோபர் 13 இல் நடைபெறும். இதில் ஏழு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.