கைரி ஜமாலுடின்: மசீச விலகிக் கொள்ள விரும்புகிறதா?, நன்றி, நல்வாழ்த்துகள், நாங்கள் வேறு யாரையாவது பார்த்துக்கொள்கிறோம்

 

பிஎன் உறுப்பியம் குறித்து மறுஆய்வு செய்வதைவிட மசீச அதனை வலுப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அம்னோவின் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் இன்று கூறினார்.

எனினும், அக்கட்சி பிஎன் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதன் இடத்தில் சீன சமூகத்தை உண்மையிலேயே பிரதிநிதிக்கும் வேறொரு கட்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கைரி கூறினார்.

மசீசவுக்கு ஒரே ஒரு இருக்கை மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அக்கட்சி அதனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மீது அதன் எதிர்வரும் கட்சித் தேர்தலின் போது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மசீசவுக்கு எங்களுடன் இருக்க விருப்பம் இல்லை என்றால், நன்றி, நல்வாழ்த்து, நாங்கள் வேறு யாரையாவது பார்த்துகொள்கிறோம் என்றாரவர்.

எங்களுடம் ஒன்றாக உழைக்க விரும்பினால், வாருங்கள், ஒன்றாக அமர்ந்து பிஎன்னை வலுப்படுத்துவோம் என்று கைரி இன்று காலை ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

நேற்று, மசீச தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கான் பிங் சியு மசீச பிஎன்னிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.