வேதாவின் அதிகாரிகள் எல்லாரும் இந்தியர்களாக இருக்கிறார்களே?

 

பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி அவரது அமைச்சில் நியமித்துள்ள அதிகாரிகள் அனைவரும் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றி புகார் எழுந்துள்ளது. அது குறித்து கருத்துரைத்த பிரதமர் மகாதிர், அவர் இன்னும் கூடுதலாக அனைவரையும் உள்ளடக்கிக் கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

“அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவர் தொடங்கியிருக்கிறார்; அவருக்குத் தெரிந்தவர்களை, அவர் நியமிக்கிறார்.

“அவருக்குத் தெரிந்தவர்களில் மிக அதிகமானவர்கள் அவரது வட்டம், ஹிண்ட்ராப், அல்லது இந்தியச் சமூகத்திலிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும்”, என்று மகாதிர் செரடாங்கில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அமைச்சர் வேதமூர்த்தி இந்திய மலேசியர்களை மட்டுமே அதிகாரிகளாக நியமித்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ள புகார்கள் பற்றி கருத்துரைக்கையில் மகாதிர் இவ்வாறு கூறினார்.

அவர் ஏகப்பட்ட செயலாளர்களை நியமித்துள்ளது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் கருத்துரைக்க விரும்பவில்லை என்று வேதமூர்த்தியின் உதவியாளர் இன்று முன்னேரத்தில் தெரிவித்தார்.