சீ பீல்ட் கோவிலில் பெரும் குழப்பம்: இருவர் கைது

சீ பீல்ட் மகா மாரியம்மன் கோவிலில் பெரும் குழப்பம் விளைவித்தவர்களில் 30 வயதான இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கோவிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் செரடாங் மருத்தவமனையில் சிகிட்சை பெற்று வரும் வேளையில் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை மணி 2.00 அளவில் கோவிலில் ஏற்பட்ட கைகலப்பில் அவர்கள் காயமுற்றனர் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சோர் கூறினார்.

இச்சம்பவத்தில் 18 கார்களுக்கும் இரு மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வைக்கப்பட்டன. ஒரு போலீஸ் ரோந்து காரும் வீசப்பட்ட கற்களால் பாதிக்கப்பட்டது என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.

100 ஆண்டுகால கோவிலின் இடமாற்றம் குறித்து இரு போட்டித் தரப்பினருக்கும் இடையில் அக்கோவிலில் நடந்த கைகலப்பில் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கிறது.

-பெர்னாமா