சீ  பீல்ட் தோட்ட ஆலய இடம்மாற்று விவகாரத்தில் அணைவரும் பொறுப்புடன் செயல் படவேண்டும், சேவியர்

 

சுபாங் ஜெயா சீ பீல்ட் தோட்ட ஆலய  இடம்மாற்று விவகாரத்தில்  அணைவரும் மிகப் பொறுப்புடன் செயல்படவேண்டும். போலீசார்  இவ்விகாரத்தில் எந்தப் பாகுபாடுமின்றி நியாயமாகச் செயல்பட வேண்டும் என மலேசிய போலீஸ் படைத்தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். போலீஸ் படைத்தலைவரும் அதற்கு தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

.பொதுமக்கள் தங்கள் கண்டதை அப்படியே போலீஸ் புகாராக அளித்துச் சட்டம்  அதன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். மலேசியா ஒரு பல இன மக்கள் வாழும் ஓர் அமைதி விரும்பும் நாடு,  நமக்குள் ஏதும் கருத்து வேறுபாடுகள், பிணக்கு இருந்தால் அதனை முறையாகத் தீர்த்துக் கொள்ள நமக்குப் பல வழி வகைகள்  உண்டு. அதில் சட்டரீதியான தீர்வும் அடங்கும். வன்செயல்கள் வழி இது நாள் வரை மலேசியர்கள் கட்டிக்காத்த தேசத்தை நீர்மூலமாக்க எவரையும் அனுமதிக்க முடியாது.

இந்த  ஆலயத்தின்  விவகாரம் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான்  ஆட்சி  அமைவதற்கு முன்பே  நீதிமன்றத்தை அணுகி, தீர்ப்பு பெறப் பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில அரசும் நீதிமன்றத் தீர்ப்பின்படியே  அனைத்துத் தரப்பின்  ஒப்புதலையும் பெற்று, கோவிலை மீண்டும் நிர்மாணிக்க மாற்று நிலமாக ஒரு ஏக்கர் நிலத்தையும் ஒரு மில்லியன் வெள்ளியையும் வழங்க மேம்பாட்டாளரை நிர்ப்பந்தித்தது.

அந்தத் தொகை இப்பொழுது 1.5 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இருப்பினும் அதில், உடன்பட முடியாத ஒரு சிலர், என்னைக்  குற்றம் சொன்னதால் அவர்கள் சிறந்த முடிவை எடுக்கும் வண்ணம், நான் ஒதுங்கிக் கொண்டேன்.

இதுநாள் வரை ஜனநாயக நீதியான, அமைதியான போராட்டமாக இருந்தது, ஏன் வன்செயலாக மாறியது? இத்தனை ஆண்டுகள் கட்டுக்கோப்பாக நடந்த போராட்டம் ஏன் வெறித்தனமாக மாறியது? யார் மாற்றியது? இவற்றின் மீது போலீசார் சரியான விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று, வெளியாரின் தலையீட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதால், ஓர்  ஆலய விவகாரம் நாட்டைச் சுடுகாடாக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதைப் பாராமல் இருக்க முடியாது.

இத்தனை ஆண்டுகள் அணைத்துச் சாராரும் காட்டிய பொறுமையை அர்த்தமில்லாமல் செய்யும் வன்முறைகள் மீது சரியான விசாரணை வேண்டும். போலீசார் எந்தப் பாகுபாடுமின்றித் தக்க விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இம்மாதிரி நேரங்களில் நம் மக்கள் அமைதி காக்க வேண்டும், கண்ணாடி வீடுகளில் இருந்துக் கொண்டு கல்வீசுவதற்கு ஒப்பாகும் ஒருவருக்கு – ஒருவர் எதிர்வினையாடுவது, அதனால் அனைவரும் சட்டம்  அதன் கடமையை செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.