சீபீல்ட் ஆலய கலவரம்: இதுவரை 21 பேர் கைது

சுபாங் ஜெயா யுஎஸ்ஜே 25, ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தெரிவித்த சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூர், ஆகக் கடைசியாக நேற்று மாலை இருவரும் இன்று இருவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

இன்று காலை கைதான இருவரும் ஒரு காரில் இருந்ததாகவும் அதில் போலீசார் வெட்டுக் கத்திகளைக் கண்டெடுத்ததாகவும் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா தீயணைப்பு, மீட்புத் துறை பணியாளர் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்ததாக மன்சூர் கூறினார். ஆலயத்துக்கு வெளியில் தீ வைக்கப்பட்ட ஒரு காரின் நெருப்பை அணைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்தபோது அவர் தாக்கப்பட்டார்.

ஆலய கலவரத்தில் இதுவரை 23 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தீயணைப்பு ஊர்தி ஒன்று சேதமடைந்தது என்றும் அவர் சொன்னார்.