அஸ்மின்: மலேசியாவும் சிங்கப்பூரும் வலுவான உறவுகளை நிலைநிறுத்த பாடுபடும்

மலேசியாவும் சிங்கப்பூரும் வலுவான உறவுகளை வைத்துக்கொள்வது இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்தது என மலேசிய பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார்.

“இரண்டும் மிக நெருக்கமான அண்டை நாடுகள், நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளாலும் குடும்ப உறவுகளாலும் பிணைக்கப்பட்டவை”, என்றவர் அவரது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இன்று நடைபெற்றிருக்க வேண்டிய இஸ்கண்டர் மலேசியா மீதான கூட்டு அமைச்சர் நிலைக் குழு(ஜேஎம்சிஐஎம்)வின் 14வது கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் இரு தரப்பு விவகாரங்கள் பற்றிப் பேசுவதற்காக அஸ்மின்  சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இன்று அவர், சிங்கப்பூர் தேசிய மேம்பாட்டு அமைச்சர் லாரன்ஸ் வொங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்துவார்.

ஜேஎம்சிஐஎம் கூட்டத்துக்குச் செல்லும் மலேசிய தூதுக்குழுவுக்கு அஸ்மின்தான் தலைமையேற்பதாக இருந்தது.

ஆனால், இரு நாடுகளும் அக்கூட்டத்தை ஒத்திவைக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டன.