நஜிப் மீதான தப்பெண்ண வழக்கு: நீதிமன்றம் ஆய்வு விண்ணப்பத்தைச் செவிமடுத்தது

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒரு பொது ஊழியரா அல்லது பொது அதிகாரியா என்பது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் எனும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் மக்கள் பிரகடனத்தின் (டெக்லராசி ரக்யாட்) ஒருங்கிணைப்பாளர் கைருட்டின் அபு ஹஸான் இருவரது விண்ணப்பத்தையும் செவிமடுக்க, ஏப்ரல் 23-ம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

தலைமை நீதிபதி, ரிச்சர்ட் மலாஞ்ஜும் தலைமையிலான, பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு, மகாதிர், வழக்குரைஞர் கைருட்டின், முகமட் ஹானிஃப் கத்ரி அப்துல்லாவின் முன்மொழிவு மற்றும் அதே விஷயத்தில் டாமான்சாரா எம்பி, தோனி புவாவின் மேல்முறையீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இன்று இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட தரப்பினர், நஜிப்புக்கு எதிரான தப்பெண்ண வழக்கை தொடரும் முன்னர், அவர் பொது ஊழியரா அல்லது அதிகாரியா எனும் மீளாய்வு மனு தீர்க்கப்பட வேண்டும்.

நஜிப்பின் வழக்கறிஞர், முகமட் ஹஃபாரிஷாம் ஹருன், உச்ச நீதிமன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, அது கல்விசார்ந்த ஒன்று என்று தனது வாடிக்கையாளர் கருதியதாக கூறினார். இருப்பினும், ஏப்ரல் 23-ம் தேதிவரை காத்திருக்க போவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருதரப்பினரும், வழக்கை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்க ஒப்புக்கொண்டதாக மலாஞ்ஜும் தெரிவித்தார்.