அமனா: செமிஞ்யில் கட்சிச் சின்னத்துக்கோ அரசாங்க இயந்திரங்களுக்கோ இடமில்லை

அமனா கட்சி , அதன் உறுப்பினர்கள் செமிஞ்யி பகுதியில் அங்கு இடைத் தேர்தல் முடிவுறும்வரை பக்கத்தான் ஹரப்பான் சின்னங்களைத்தான் அணிய வேண்டும் கட்சிச் சின்னத்தை அணியக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த அமனா தலைமைத்துவக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை கூறியது.

இடைத் தேர்தல் காலத்தில் அரசாங்க நிறுவனங்களும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை.

“செமிஞ்யி சட்டமன்றத் தொகுதியைக் கூடுதல் பெரும்பான்மையுடன் பக்கத்தான் ஹரப்பான் தக்க வைத்துக்கொள்வதை உறுதிப்படுத்த இந்த உத்தரவை அனைவரும் கடைப்பிடிப்பார்கள் என அமனா எதிர்பார்க்கிறது”, என அவ்வறிக்கை கூறிற்று.

செமிஞ்யி இடைத் தேர்தலின் வாக்களிப்பு நாள் மார்ச் 2. வரும் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்.

14வது பொதுத் தேர்தலுக்குப் பின் நடந்துள்ள இடைத் தேர்தல்களில், வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்குதல், பரப்புரைக்கு அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்றவை உள்பட, பல தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் செய்யப்பட்டுள்ளன.