செமிஞ்யே-இல் பிஎன் வெற்றிக்கான அறிகுறி முன்கூட்டியே தெரிகிறாம்: நஜிப் கூறுகிறார்

செமிஞ்யே தேர்தல்| பிஎன் வேட்பாளர் சக்கரியா ஹனாபிக்காக பரப்புரை செய்துவரும் முன்னாள் பிரதமரான நஜிப் அப்துல் ரசாக், செமிஞ்யேயில் பிஎன் வெற்றி பெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் அதே வேளை பக்கத்தான் ஹரப்பான் கூட்டங்களுக்கு ஆதரவே இல்லை என்றும் கூறினார்.

நேற்றிரவு தாமான் தாசெக் கெசுமாவில், சுமார் ஆயிரம் பேரடங்கிய கூட்டத்தில் உரை நிகழ்த்திய நஜிப், உயர் தலைவர்கள் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி போன்றோர் கலந்துகொள்ளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டங்களைவிட பிஎன் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டம் அதிகம் என்றார்.

“அஸ்மின் (செமிஞ்யேயில் பரப்புரை செய்ய) வருவதற்கே பயமாக உள்ளது என்கிறார். எனக்குப் பயமில்லை. இந்த அளவு வரவேற்பு அமிருடினுக்குக் கிடைத்ததா என்பதும் எனக்கு உறுதியாக தெரியவில்லை.

“இன்றிரவு தாமான் தாசெக் கெசுமாவில் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள். எம்பி (அமிருடின்) கூட்டத்தில் பல நாற்காலிகள் காலியாக இருக்கக் கண்டேன்.

“இதன் பொருள் என்ன? நாம் வெற்றிபெறப் போகிறோம் என்பதற்கான அறிகுறிதான் இது”, என்றார் நஜிப்.