12 தடுப்பூசிகளில் இரண்டைக் கட்டாயமாக்கலாமா என்று சுகாதார அமைச்சு பரிசீலனை

தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் உள்ள 12 வகை தடுப்பூசிகளில் இரண்டையாவது போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டுமென்ற மலேசிய குழந்தைமருத்துவர் சங்கத்தின் பரிந்துரையைப் பரிசீலிக்கச் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது.

தட்டம்மை, தாளம்மை அல்லது கூவைக்கட்டு, ரூபெல்லா (எம்எம்ஆர்) ஆகியவற்றுக்கும் டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய்க்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குமாறு கூறும் அப்பரிந்துரை இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.

“தடுப்பூசிகளில் ஒன்று அல்லது இரண்டையாவது கட்டாயமாக்க வேண்டுமென்று அப்பரிந்துரை வலியுறுத்துகிறது. அவற்றைப் போட்டுக்கொள்வதன்வழி ஆறிலிருந்து ஏழுவகை நோய்களைத் தடுக்க முடியும்”, என்று அமைச்சர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.