விபசாரத்தைத் தடுக்க குடிநுழைவுத் துறை நடவடிக்கை

வெளிநாட்டினர் சுற்றுப்பயணத்துக்கு வந்ததாகக் கூறிக்கொண்டு விபசாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கக் குடிநுழைவுத் துறை சமூக வருகைக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளைக் கடுமையாக்கக் கூடும்.

சமூக வருகைக்கு அளிக்கப்படும் அனுமதிகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்று எனக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸாய்மீ டாவுட் கூறினார்.

“நாட்டின் நுழைவாயில்களில் அவர்கள் கூடுதல் விசாரணைக்கு உள்படுத்தப்படக் கூடும்.

“ஆனாலும் அப்படிச் செய்வதற்குமுன் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது. நாம் கடுமையாக நடந்துகொள்வதாகச் சுற்றுப்பயணிகள் நினைத்துவிடக் கூடாது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, ஜார்ஜ்டவுன், பட்டர்வர்த் வட்டாரங்களில் குடிநுழைவு அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்திய வெளிநாட்டவருக்கு எதிராக கைருல் ட்ஸாய்மீ தலைமையில் ஒப்ஸ் கெகார் என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் 69பேர் பிடிபட்டனர்.

அவர்களில் 19பேர், 23க்கும் 30 வயதுக்குமிடைப்பட்ட பெண்கள். தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அவர்கள் செக்ஸ் சேவை வழங்கி வந்திருக்கிறார்கள்.