‘காபிர்கள்’ நாட்டை ஆண்டால் உய்குர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள முஸ்லிம்களுக்கும்

இந்நாட்டை முஸ்லிம்-அல்லாதார் ஆள அனுமதித்தால் சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள முஸ்லிம்களுக்கும் ஏற்படும் என்று பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் மொக்தார் செனிக் எச்சரித்துள்ளார்.

“எனக்குச் சீனாவில் உள்ள சக முஸ்லிம்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் நோன்பிருக்கவும் சமயத்தைப் பின்பற்றவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மலேசிய முஸ்லிம்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

“காபிர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுதால் இந்நாட்டுக்கும் அதே கதிதான்”, என்றவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

சீனா, அதன் சின்சியாங் மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாகவும் குறைகூறப்படுகிறது.

ஆனால், சீனா அக்குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

மொக்தார், 15வது பொதுத் தேர்தலுக்காக இளைஞர்கள் இப்போதே வாக்காளர்களாக பதிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“15வது பொது தேர்தலில் டிஏபி-இன் ஆதிக்கத்தில் உள்ள பக்கத்தான் ஹரப்பானைக் கவிழ்க்க வேண்டும் அதற்காக, நம் பிள்ளைகள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துங்கள் ”, என்றவர் கூறினார்.