நாட்டுக்கே முன்னுரிமை- டயிம் சைனுடின்

மக்கள் நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார் முன்னாள் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் டயிம் சைனுடின். நாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது ஒற்றுமை மேலோங்குவதற்கும் நாடு மேலும் வளர்ச்சி பெறவும் வழிகோலும் என்றாரவர்.

“முதலிடம் அரசமைப்புக்கு. அரசமைப்பையும் ருக்குன் நெகராவையும் நாம் மதிக்க வேண்டும்.

“அதற்கு அடுத்து நாம் மலேசியர்கள் என்பதை நினைவில் கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

“நாட்டுக்கு முன்னுரிமை கொடுப்போமானால், இன்ஷா’ அல்லா, நம் நாடு பத்திரமாக இருக்கும்”, என டயிம் அஸ்ட்ரோ அவானிக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.

சாபா, சரவாக் உரிமைகளுக்காக போராடுகிறார்கள், சமயம்தான் முக்கியம் என்று வாதாடுகிறார்கள், இருந்தாலும் நாடுதான் மிக முக்கியமானது என்றாரவர்.

“சமயம் முக்கியம்தான். ஆனால், நாடு அதனினும் முக்கியமானது. மலேசியர்களாகிய நாம் மலேசியாவுக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும்”, என்றவர் சொன்னார்.