பங்களாவைக் கைப்பற்றியது முறையல்ல: அதிகாரிகளைச் சாடினார் ஜோ லோவின் நண்பர்

1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள லோ தேக் ஜோவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், அதிகாரிகள் பினாங்கு தஞ்சோங் பூங்காவில் உள்ள ஜோ லோ குடும்பத்தாரின் பங்களா வீட்டைக் கைப்பற்றியதைக் குறை கூறினார்.

Citizens Awareness Chant Group எனப்படும் என்ஜிஓ-வை வைத்துள்ள யான் லீ, 1எம்டிபி விவகாரத்துக்கும் அந்த பங்களாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜோ லோவின் பெற்றோர்களான லேர்ரி லோ-வையும் கோ கைக் ஈ-வையும் இருபதாண்டுகளுக்கு மேலாக தனக்குத் தெரியும் என்று யான் கூறினார்.

பங்களா பல ஆண்டுகளுக்குமுன், 1எம்டிபி ஊழல் நிகழ்வதற்கு முன்பே கட்டப்பட்டது என்பதால் அதை அந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல என்றாரவர்.

“ கையாடல் செய்யப்பட்ட நிதி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருந்தால் அதைக் கைப்பற்றுவது சரியே.

“ஆனால், இந்த வீடு 1எம்டிபி நிறுவப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாயிற்றே இதை 1எம்டிபி-யுடன் தொடர்புப்படுத்துவது எப்படி நியாயமாகும்?”, என்றவர் வினவினார்.

“ஒரு குடும்பத்தின் வீட்டை- அது யாருடைய வீடாக இருந்தாலும் சரி- நியாயமான காரணமின்றி பிடுங்கிக் கொள்வது சரியல்ல”, என்றவர் சொன்னார்.