உங்கள் கருத்து: ‘நன்றி சுக்ரி. இனி, லத்திபா சொன்னபடி செய்கிறாரா, பார்ப்போம்’

மேற்கொண்ட பணி முடிந்து விட்டது- எம்ஏசிசியிலிருந்து விலகியபோது சுக்ரி கூறியது

பெர்ட்டான்: எம்ஏசிசி-இன் முன்னாள் தலைவர் முகம்மட் சுக்ரி அப்துல் ஓராண்டு என்னும் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். ஆனால், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே அவரது திடீர் பணிவிலகல் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ண வைக்கிறது.

அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் அவருக்குமிடையில் ஏதோ பெரிய பிரச்னை இருக்கிறது. அதுதான் சொல்வார்களே, “நெருப்பில்லாமல் புகை வராது” என்று.

உண்மை மலேசியன்: உண்மை, ஐயுறவு கொள்ள நிறையவே இடமுண்டு. லத்திபா கோயாவின் நியமனம் பற்றி நாடாளுமன்றத் தேர்வுக் குழு அறிந்திருக்கவில்லை. ஒப்பந்த காலம் முடியுமுன்னரே சுக்ரி பணியிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.

என்ன நடக்கிறது பக்கத்தான் ஹரப்பானில்? ஓர் அரசியல்வாதியை எப்படி எம்ஏசிசி தலைவராக நியமிக்கலாம்? ஹரப்பான் செய்தது சரியில்லை.

ரோஜர்5201: சுக்ரியின் நேர்மையும் நாணயமும் மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. மற்றவர்கள் ஒத்துப்பாடிக் கொண்டிருந்தபோது தவறுகளைத் துணிச்சலாகச் சுட்டிக்காட்டியவர் அவர்.

வாகண்டன்: சுக்ரியால் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். அதற்காக நாடு அவரைப் பாராட்டுகிறது.

அவரது பணியைத் தொடர புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒருவர் தேவைப்படலாம்.

தலைவெட்டி: புதிய, புகழ்பெற்ற ஒரு போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி), புதிய சட்டத்துறைத் தலைவர், இப்போது எம்ஏசிசி தலைவராக லத்திபா. முக்கியமான மூன்று அமைப்புகள் இப்போது தகுதியானவர்களில் கரங்களில் உள்ளன.

நான் நினைக்கிறேன், மகாதிர் இன்னொரு பெரிய மீனைப் பிடிக்கத் திட்டமிடுகிறார் என்று. அதற்கு மலேசியர்கள் அவருக்கும் அவரது அமைச்சரவைக்கும் முழு ஆதரவு கொடுப்பார்கள்.

பெயரிலி 5237890145285379: சுக்ரி, மலேசியாவின் மிகப் பெரிய ஊழல் இன்னும் விசாரிக்கப்படவில்லையே, அப்படியிருக்கும்போது நீங்கள் எப்படி உங்கள் பணி முடிந்து விட்டதாகக் கூற முடியும்?

சரவாக்கில் அதன் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் ஆளுநருமான அப்துல் தயிப் முகம்மட்-டின் வெட்டுமர ஊழல் குறித்து நிறைய செய்திகள் வெளிவந்துள்ளன. அவர் கோடிக் கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறதே, அது எப்படி? பணத்துக்கு வரி கட்டப்பட்டதா?

ஒக்சிமோரோன்: வெளியில் சொல்லும் காரணம் என்னவாக இருந்தாலும் இதற்குப் பின்னால் வேறு என்னமோ இருக்கிறது. அவரது நியமனம் வியப்பளித்தாலும் அது, ஹரப்பான் அரசு ஊழலை அடையாளம் கண்டு அதைத் துடைத்தொழிப்பதில் அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது.

லத்திபா நேர்மையானவர் என்று கூறப்படுவதற்கு ஏற்ப நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம். அவர் விரைவிலேயே எம்ஏசிசி கவனத்தை தயிப் முகம்மட், கூ நான் (தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்), ரோஸ்மா மன்சூர் ஆகியோர்மீது திருப்ப வேண்டும். அவர்கள்மீது ஆழமாக புலனாய்வு செய்ய வேண்டும். அவர்கள் ஊழல் செய்து தேடி வைத்துள்ளதாகக் கூறப்படும் பில்லியன்களை மீட்டெடுக்க வேண்டும்.

ஸியாடிடி: ஆமாம், ஆமாம். லத்திபா சொன்னபடி செய்கிறாரா, பார்ப்போம்.