ஆபாச காணொளி: பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த வேண்டும்

கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிமீது பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜோகூர் பிகேஆர் தலைவர் ஹசான் அப்துல் கரிம் வலியுறுத்தினார்.

குற்றம் சாட்டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே பிகேஆரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்சி விசாரணை செய்வதுதான் முறையாகும் என்றாரவர்.

“நான் அஸ்மினைத் தற்காத்துப் பேசவில்லை. ஆனால், அவர்மீது கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கட்சியில் துணைத் தலைவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன?”, என்றவர் வினவினார்.

“வாரியம் அது சுயேச்சையானது என்பதையும் நம்பிக்கைக்குரியது என்பதையும் காண்பிக்க இதுவே தக்க தருணமாகும். போலீஸ் விசாரணையில் குற்க்கிடாத வகையில் அது விசாரணை செய்ய வேண்டும்”, என்று பாசிர் கூடாங் எம்பி இன்று பிற்பகல் விடுத்த அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டார்.