ஜாஹிட் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நாளையும் நாளை மறுநாளும் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு அவர்மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என எம்ஏஏசி கூறியது.

அவர்மீது வழக்கு தொடுக்க ஏஜி அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்து விட்டதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

“அம்னோ தலைவர் நாளை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் வியாழக்கிழமை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நிறுத்தப்படுவார்.

“அவ்விரு நீதிமன்றங்களிலும் ஜாஜிட்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்”, என அவ்வறிக்கை கூறிற்று.

நேற்று, ஜாஹிட் “வெளிநாட்டவருக்கான விசா முறை”மீதான விசாரணைக்கு உதவ புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சென்றதும் அவர் கைது செய்யப்பட்டர்.

வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே ஜாஹிட்மீது நம்பிக்கை மோசடி செய்ததாகவும் கையூட்டு பெற்றதாகவும் பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.