அறிக்கைகள் வேண்டாம் அன்வாருக்குப் பக்கபலமாக நில்லுங்கள்: சாபா பிகேஆர்

சாபா பிகேஆர் தலைவர் கிறிஸ்டினா லியு, பிகேஆர் நெருக்கடி குறித்து வெறுமனே அறிக்கைகள் விடுத்தது போதும், நெருக்கடியைத் தீர்ப்பதற்குக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குத் தோள் கொடுக்க வாரீர் எனக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் அன்வாரின் முயற்சிகளை சாபா பிகேஆர் முழுமையாக ஆதரிக்கிறது”, என சாபா துணை முதலமைச்சருமான லியு இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“மேலும், மக்கள் பார்க்க விரும்புவதெல்லாம் ஹரப்பானும் பிகேஆரும் மேம்பாட்டு விவகாரங்களிலும் பொருளாதார வளர்ச்சியிலும்தான் கவனம் செலுத்துவதைத்தான் அவர்கள் உள்ளுக்குள் அடித்துக் கொள்வதை அல்ல”, என்றாரவர்.

பிகேஆரில் அன்வார் ஆதரவாளர்களும் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆதரவாளர்களும் சில ஆண்டுகளாகவே பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். இந்நிலை கடந்த மாதம் பாலியல் காணொளி வைரலானதை அடுத்து மேலும் மோசமானது.