சிலிம் ரிவர் அருகில் ஆம்புலன்ஸ் தடம்புரண்டு ஓட்டுநரும் நோயாளியும் இறந்தனர்

இன்று அதிகாலை சிலிம் ரிவர் அருகில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை 368.4 கி.மீ. -இல் ஆம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டதில் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த நோயாளியும் உயிரிழந்தனர்.

சிலிம் ரிவர் மருத்துவமனை ஊழியர்களான மேலும் மூவர் காயமடைந்தனர்.

விபத்து பற்றி காலை மணி 6.42க்கு தகவல் கிடைத்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கூறியது. எண்மர் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விபத்து நடத்திலேயே இறந்து விட்டார்; நோயாளி சிலிம் ரிவர் மருத்துவமனையில் இறந்தார் என்று ஒரு பேச்சாளர் பெர்னாமாவிடம் கூறினார்.

ஆம்புலன்ஸ் ஈப்போ ராஜா பெர்மசூரி பைனுன் மருத்துவமனையிலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு சிலிம் ரிவர் மருத்துவ மனை நோக்கிச் சென்றபோது அவ்விபத்து நிகழ்ந்தது”, என்றாரவர்.