முன்னாள் எம்பி: பாசிர் கூடாங் நெருக்கடிக்கு யார் காரணம் என்பது எப்போது தெரிவிக்கப்படும்

ஜோகூர் மந்திரி புசார்(எம்பி) டாக்டர் ஷாருடின் ஜமால் பாசிர் கூடாங் துய்மைக்கேட்டுப் பிரச்னைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதை முன்னாள் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டின் வரவேற்கிறார்.

ஆனால், அதில் இன்னும் சில விவகாரங்களுக்கு விளக்கம் தேவைப்படுவதாக அந்த அம்னோ உதவத் தலைவர் சொன்னார்.

“முக்கியமாக, தூய்மைக்கேட்டுக்குப் பொறுப்பானவர்களின் பெயர்களை மாநில அரசாங்கம் எப்போது வெளியிடும்?”, என்றவர் இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் வினவினார்.

“அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு கிடைக்குமா? மாநில அரசு அல்லது கூட்டரசு அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமா?”

தொழிற்சாலைகள் பாசிர் கூடாங்கிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்பது போக, இப்படிப்பட்ட பிரச்னைகள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கை ஏடுக்கப்படும் என்பதை மந்திரி எடுத்துரைக்கவில்லை என்றும் காலிட் கூறினார்.