‘காட்’ எழுத்து வடிவ கலையைக் கற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதா- ரபிடா சாடல்

தேசிய பொருளாதார நடவடிக்கை மன்ற உறுப்பினர் ரபிடா அசிஸ் நான்காம் ஆண்டு பகாசா மலேசியா பாடத்தில் காட் எழுத்து வடிவ கலை அறிமுகப்படுத்தப்படுவதை ஏற்கவில்லை. சித்திர எழுத்து வடிவத்தைக் கற்றுக்கொள்ளும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்துவது முறையல்ல என்றாரவர்.

இன்று பெர்டானா தலைமைத்துவ அற நிறுவனத்தில் உரையாற்றிய அந்த முன்னாள் அமைச்சர், அத்திட்டத்துக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்து கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்குக்கு ஒரு குறுஞ் செய்தி அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார்.

“அது ஒரு கலை. அதைப் பள்ளிப்பாடத்தில் கட்டாயமாக்குவது தேவையற்றது.

“அதை ஒரு பாடமாக்காமல் இருப்பது நல்லது என்று குறிப்பிட்டு மஸ்லிக்குக் குறுஞ் செய்தி அனுப்பி இருக்கிறேன்”, என்றவர் தெரிவித்தார்.