மலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர வேண்டும்- பெர்னாமா தலைவர்

மலேசியர்கள் நாட்டின் மேம்பாட்டிலும் மக்களின் முன்னேற்றத்திலும் பத்திரிக்கைகள் ஆற்றிவரும் பங்கைப் பாராட்டும் வகையில் அவற்றைத் தொடர்ந்து வாங்க வேண்டும், படிக்க வேண்டும்.

இவ்வாறு கேட்டுக்கொண்ட மலேசிய தேசிய செய்தி நிறுவன(பெர்னாமா)த்தின் தலைவர் அஸ்மான் ஊஜாங், தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி அல்லது அதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக ஊடகத் தொழிலே உருமாறி சவால்மிக்க தொழிலாகியுள்ளது என்றார்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது நீண்டகாலமாக இருந்துவரும் பத்திரிகை துறைதான் என்றார் அஸ்மான். இன்றைய இளைஞர்களுக்குப் படிக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது.

“செய்தித்தாளின் விலை ரிம1 அல்லது ரிம1.50தான். நாளிதழ்களையும் வாராந்திர ஏடுகளையும் வாங்குவதில் என்ன தப்பு? அது பத்திரிகையாளர்களுக்கு ஊக்கமளிக்கும். அவர்கள் தத்தம் பத்திரிகைகளின் தரத்தை உயர்த்த மேலும் பாடுபடுவார்கள்”, என அஸ்மான் நேற்று பெர்னாமா பணியாளர் சங்கத்தின் 45ஆவது விருந்து நிகழ்ச்சியில் கூறினார்.