ஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’ காணப்பட்டுள்ளது

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், ஒத்திவைக்கப்பட்ட ஜோகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து முறை (ஆர்டிஎஸ்) தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஒருவகை புரிதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

இரண்டு அண்டை நாடுகளும் அத்திட்டம் தொடர்பான விவகாரங்களைப் பேசித் தீர்த்துக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

எல்லாவற்றுக்கும் தீர்வு கண்ட பிறகு அத்திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று செய்யப்படும்.

“ஆர்டிஎஸ் ஜோகூர்- சிங்கப்பூர் பற்றி விரைவில் அறிவிப்போம். இரு நாடுகளும் திரைமறைவில் பேசிக் கொண்டிருக்கின்றன.

“ஆர்டிஎஸ் ஒரு முக்கியமான திட்டம். கடந்த மாதம்தான் அது பற்றி சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வானைச் சந்தித்துப் பேசினேன்.

“ஒரு வித உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் விரிவாக பேசி முடிவு காண வேண்டியுள்ளது”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.