ஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன

கிளந்தானில் பேசி சர்ச்சையை உண்டாக்கியதை அடுத்து பல மாநிலங்கள் அச்சமயப் போதகர் பேசுவதற்குத் தடை விதித்துள்ளன.

கெடா, மலாக்கா, சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் அவர் பேச அனுமதிக்கப் போவதில்லை என அம்மாநில இஸ்லாமிய விவகார அதிகாரிகள் கூறினர். மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸஹாரி, கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்மாயில் சாலே, சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத் தலைவர் முகம்மட் குஸ்ரின் முனாவி, பினாங்கு துணை முதல்வர் அஹமட் ஸகியுடின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் அதை உறுதிப்படுத்தினர்.

கடந்த வார இறுதியில் பெர்லிசில் ஜாகிரும் அவரின் குடும்பத்தாரும் பேசக் கூடாது என்று தடுக்கப்பட்டது.

தன் எல்லைக்குள் யார் நுழையலாம் யார் நுழையக்கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றுள்ள சரவாக், ஜாகிர் தன் எல்லைக்குள் வரக்கூடாது எனத் தடை விதித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.

பேராக், ஜோகூர், சாபா ஆகியவற்றில் ஜாகிர் பேசுவதற்குத் தடை இல்லைதான் ஆனாலும் அவர் பேசுவதற்கு அனுமதி கோரப்பட்டால் அணுக்கமாக ஆராயப்படும் என மாநில அதிகாரிகள் கூறினர்.