பென்சன் திட்டம் அகற்றப்படுகிறதா? அதற்குமுன் பேச்சுவார்த்தை தேவை என்கிறது கியூபெக்ஸ்

அரசாங்கம் பென்சன்(ஓய்வூதிய) திட்டத்தை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் ஆள்களை வேலைக்குச் சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கப் பணியாளர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸுடன் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும்.

அரசுப் பணியாளர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அது அவசியம் என்று கியூபெக்ஸ் தலைவர் ஆசே மூடா கூறினார்.

“2020-இல் நிரந்தரப் பணியாளர்களை, ஓய்வூதியம் பெறும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டம் நிறுத்தப்படும் என்று பொதுச்சேவைத் துறை தலைமை இயக்குனர் (பொர்ஹான் டோலா) அறிக்கை விடுத்திருப்பது கண்டு கியூபெக்ஸ் அதிர்ச்சி அடைகிறது” என்றாரவர்.

அதைப் பார்க்கையில் அரசு பணி ஆற்ற முன்வரும் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம்தான் தோன்றுகிறது என்று ஆசே ஓர் அறிக்கையில் கூறினார்.

இப்போதுள்ள பென்சன் திட்டமே நாட்டுக்கு நல்லது, அது கூட்டரசு அரசமைப்புக்கும் ஏற்புடையது என்றவர் சொன்னார்.