சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்க விசா கட்டணம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்

விசா கட்டணத்தைக் குறிப்பிட்ட சில பருவ காலங்களில் தள்ளுபடி செய்வது குறித்து புத்ரா ஜெயா ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அது சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பெருக உதவும் என கெப்போங் எம்பி லிம் லிப் எங் ஓர் அறிக்கையில் கூறினார்.

தாய்லாந்து நவம்பருக்கும் ஏப்ரலுக்குமிடையில் சுற்றுப்பயணிகளுக்கு விசா கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக இது செய்யப்படுகிறது.

“இத்திட்டம் தாய்லாந்துக்கு வெற்றி அளித்துள்ளது. அதை ரஷ்யாவும் பின்பற்றத் தொடங்கி விட்டது. அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு மலேசியாவும் விசா கட்டணத்தைக் கைவிடுவது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

“குளிர் காலத்துக்கு மட்டுமாவது அதைச் செய்ய வேண்டும். அதை உடனடியாக குளிரிலிருந்து தப்பிக்க எண்ணும் சுற்றுப்பயணிகளிடையே விளம்பரப்படுத்தவும் வேண்டும்”, என்றாரவர்.

2019 முதல் பாதி ஆண்டில் சுற்றுப்பயண வருமானம் ரிம41.687 பில்லியனாக இருந்தது. சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடு அதிகரித்தால்கூட ரிம2 பில்லியன் மேலதிகமாகக் கிடைக்கும் என்று லிம் கூறினார்.