போதைப் பொருள் குற்றங்களுக்காக இவ்வாண்டில் 137,225 பேர் கைது

போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை(என்சிஐடி), இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் 26வரை மொத்தம் 137,225 பேரைப் போதைப் பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்துள்ளது.

அவர்களில் 20,613 பேர் போதைப் பொருள் கடத்தலுக்காகவும் 51,018 பேர் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும் 65,594 பேர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் என்சிஐடி இயக்குனர் முகம்மட் கலில் காடர் முகம்மட் கூறினார்.

“கைதானவர்களில் 9512 பேர் வெளிநாட்டினர்”, என்றவர் இன்று சிரம்பானில், நெகிரி செம்பிலான் போலீஸ் தலைமையகத்தில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதே காலக் கட்டத்தில் 18,709. 01 கிலோ கிராம் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரிம2.69 பில்லியன்.