ரபிசிக்கும் நுருலுக்கும் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

ரபிசி ரம்லியும் நுருல் இசாவும் பிகேஆரில் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்து முன்னர் அவர்களுக்குச் சற்றே அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

ரபிசி நிதிமன்ற வழக்குகளில் வெற்றிகண்ட பின்னரும் தீவிர அரசியலுக்குத் திரும்பாமல் இருக்கிறாரே என்று வினவப்பட்டதற்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

“ரபிசி எனக்கு நிறைய உதவி செய்கிறார். நான் நினைக்கிறேன், நுருல் இசா போன்றே அவருக்கும் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று கவலை இருக்கலாம். அவர்களுக்கு ஏதுவாக ஏதாவது நடக்குமா என்று காத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் போதுமான அவகாசம் கொடுப்போம்.

“(நீங்கள் சொல்வதுபோல் அவர்களுக்குத் திறமை உள்ளது என்பதை) ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்களை உடனே முடிவு செய்யுமாறு அவசரப்படுத்தக் கூடாது. நன்கு சிந்தித்து முடிவெடுக்கட்டும்”, என்றாரவர்..

ரபிசியும் நுருலும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படுபவர்கள் அல்லர் என்றும் அன்வார் கூறினார்.