கட்சி மாறியவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்- ஜாஹிட்

கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் அதற்காக மனம் வருந்தித் திரும்பி வந்தால் அம்னோ அவர்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ளது எனக் கட்சித் தலைவர் அஹமட் ஜாஜிட் ஹமிடி கூறினார்.

நேற்றிரவு, ஷா ஆலமில் முவாஃபகாட் நேசனல் கூட்டத்தில் அவர் அதைத் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் கூறியது.

அம்னோவிலிருந்து வெளியேறிச் சென்றவர்களைப் பொதுமக்கள் வெறுத்தொதுக்குவதாக அவர் கூறினார்.

“அவர்கள் அவர்களின் மாநிலத்துக்கு அல்லது தொகுதிகளுக்குச் சென்றால் மக்கள் அவர்களைக் கண்டுக்கொள்வதில்லை.

“வெள்ளிக்கிழமை தொழுகைகளின்போது யாரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதில்லை.

“அவர்கள் தங்கள் செய்கைக்காக வருந்தித் திரும்பி வந்தால் அம்னோ அவர்களை வரவேற்கும்”, என்றாரவர்.

குறைந்தது 17 அம்னோ எம்பிகள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். வெளியேறியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஜெலி எம்பி முஸ்டபா முகம்மட். வெளியேறிய பலர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் பெர்சத்துவில் சேர்ந்துள்ளனர்.