அன்வாரைக் குற்றம் சாட்டிய யூசுப் ராவுத்தர் மீண்டும் புக்கிட் அமான் வந்தார்

நேற்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் துருவித் துருவி விசாரிக்கப்பட்ட யூசுப் ராவுத்தர் இன்று மீண்டும் புக்கிட் அமானில் காணப்பட்டார்.

நண்பகல் வாக்கில் அவர் போலீஸ் தலைமையகம் வந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவர் யூசுப் ராவித்தரின் உறவினராக இருக்கலாம். ஆனால், அவரின் வழக்குரைஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா உடன்வரவில்லை.

நேற்று விசாரணை முடிவடையவில்லை என்றும் அதனால்தான் யூசுப் ராவுத்தர் இன்று மீண்டும் வந்திருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஆனல், உடன் வந்துள்ள மற்றொரு சாட்சி யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

யூசுப் ராவுத்தர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் எஸ்.எம்.இட்ரிசின் பேரனாவார்.

அவர் 2018 அக்டோபர் 2-இல், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த புதன்கிழமை சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்தார். பிறகு போலீஸ் புகார் ஒன்றையும் செய்திருந்தார்.