ஆர்டிடி பணியாளர் கொள்ளையடித்ததுடன் வாகனங்களையும் மோதித் தள்ளினார்

கோலாலும்பூரில், சாலைப் போக்குவரத்துத் துறை பணியாளர் ஒருவர் உடல்குறையுள்ள ஒருவரிடம் கொள்ளையிட்டு தப்பி ஓட முயன்றார்.

நேற்று மாலை 4.50 அளவில் ஜாலான் சங்காட் புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்நபர் தப்பியோடும் முயற்சியில் ஐந்து வாகனங்களையும் மோதித் தள்ளினார்.

அது மட்டுமல்லாமல் அவர் காரிலிருந்த உடல்குறையுடைய ஒருவரையும் வெளியில் தள்ளினார் எனச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக கோலாலும்பூர் சாலைப்போக்குவரத்து அமலாக்க, விசாரணைத் துறை தலைவர் ஏசிபி சுல்கிப்ளி யஹ்யா கூறினார்.

“கொள்ளைச் சம்பவத்தைக் கண்டவர்கள் சந்தேகப் பேர்வழியைத் துரத்திச் சென்று காரை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர் நிற்காமல் தொடர்ந்து ஓட்டி சென்றார். அப்படி ஓட்டிச் சென்றதில் பல வாகனங்களுடன் மோதினார், இறுதியில் ஜாலான் புருணை உத்தாராவில் மாலை மணி 5.20 வாக்கில் பொதுமக்கள் அவரைப் பிடித்தனர்”, என சுல்கிப்ளி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பிடிபட்டவர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.