4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு, டாக்டர் மகாதீர் அமைதி காக்கிறார்

பெர்சத்து தலைவர்கள் இன்று சுமார் நான்கு மணி நேரம் சந்தித்தனர். இருப்பினும், கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் அவர்களை அணுகிய பின்னர் அதுகுறித்து அவர்கள் வாயைத் திறக்கவில்லை.

இன்று, கோலாலம்பூரில் பல அரசியல் குழுக்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்துகின்றன. இதில் பி.கே.ஆர். துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் சரவாக் கட்சி கூட்டணி (ஜி.பி.எஸ்)/ Gabungan Parti Sarawak (GPS) தலைவர்களும் அடங்குவர்.

கூட்டத்திற்குப் பிறகு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி தலைமையகத்தை விட்டு வெளியேறும்போது செய்தியாளர்களிடம் கையை மட்டும் அசைத்து சென்றார் மகாதீர்.

முகிதீன் யாசின் மற்றும் இளைஞர் தலைவர் சையத் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். பொதுச் செயலாளர் மர்சுகி யஹ்யாவுக்கும் இதே நிலைதான்.

எவ்வாறாயினும், கூட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை என்று உச்ச கவுன்சில் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.டி) முகமட் ரபீக் நைசமோஹிதீன் கூறினார்.

“வழக்கமான விஷயம் தான் … (நாங்கள் பேசுகிறோம்) கட்சியின் திசையை குறித்து..,” என்று அவர் கூறினார்.
துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர், ஒரு திருமணத்திற்கு புறப்பட வேண்டும் என்றும், கூட்டம் வழக்கமான விஷயத்தைப் பற்றி தான் விவாதித்தது என்றார்.

முன்பெல்லாம், மகாதீர் அல்லது முகிதீன் பொதுவாக கூட்டத்திற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார்கள்.
அம்னோ மற்றும் பாஸ் உடனான ஒத்துழைப்பு பற்றி கூட்டத்தில் பேசப்பட்டிருக்கும் என்ற ஊகங்கள் உள்ளன.

கட்சியின் தலைவர்கள் “தயாராக” இருப்பதாக அம்னோ வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

அதே நேரத்தில், அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் இந்த வார இறுதியில் பஹாங்கின் ஜண்டா பைக்கில் ஒரு கூட்டத்தை நடத்துகின்றனர்.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில், கோலாலம்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பல உயர்மட்ட அம்னோ தலைவர்கள் காணப்பட்டனர், அங்கு அவர்கள் மற்றொரு கூட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படிகிறது.

புதிய அரசியல் சீரமைப்பு பற்றிய பேச்சுக்கள் கடந்த வாரம் முதல், வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கவுன்சில் கூட்டம் வரை தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.