ஒரு நாளைக்கு 4 முறை ‘உணவு வாங்க’ வெளியே சென்றவர் கைது

உணவு வாங்குவதற்காக தனது வீட்டை விட்டு வெளியே சென்றதாகக் கூறும் ஒரு நபர், நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டார் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு ஒரு நபரை குறிப்பாக குடும்பத் தலைவர் வெளியே சென்று உணவு மற்றும் தேவைகளை வாங்க அனுமதித்தாலும், அந்த நபர் ஒரு நாளைக்கு பல முறை அவ்வாறு செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்று இஸ்மாயில் கூறினார்.

“அவர் உணவு வாங்க செல்வதாக ஒரு காரணம் கொடுக்கிறார் ஆனால் ஒரு நாளைக்கு நான்கு முறை வீட்டிற்கு வெளியே செல்கிறார்.

“காலையில் போலிசார் அதே நபருடைய முகத்தைக் அடிக்கடி காணும் வரை அவர் வந்து செல்கிறார். காலை, மதியம், மாலை, இரவு என்று அடிக்கடி வெளியேறுகிறார்.

“அவர் உணவு வாங்க வரவில்லை ஆனால் வீட்டிற்கு வெளியே சென்றுவருகிறார் என்று போலீசார் சந்தேகித்தனர்,” என்று அவர் கூறினார்.

நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு நடைமுறையில் உள்ள பத்தாவது நாளான நேற்று 649 கைதுகளுக்கு மத்தியில் இந்த நபரும் ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

மொத்தத்தில், காவல்துறையும் இராணுவமும் 997 சாலைத் தடைகளை மேற்கொண்டு, 301,938 வாகனங்களை சோதனை செய்தன.

கூடுதலாக, மொத்தம் 3,223 வணிக வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டன, சில அத்தியாவசிய சேவைகள் பிரிவில் சேர்க்கப்படாததால் அவை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

உணவு வழங்கல் குறித்து, 27 சூப்பர் மார்க்கெட்டுகளில் சிறப்பு பணிக்குழுவின் ஆய்வில், அடிப்படை உணவுப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகக் கண்டறியப்பட்டது.

“ஆனால் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். அரிசி வழங்கல் போதுமானது என்று நாங்கள் (அரசு) கூறும்போது, அது ஒட்டுமொத்தமாக அரிசியை குறிக்கிறது, ஒரு குறிப்பிட்ட முத்திரைக் (பிராண்ட்) கொண்ட அரிசியை அல்ல”.

“சிலர் பிராண்ட் ஏ அரிசியை விரும்பலாம். அது இல்லாவிட்டால், சந்தையில் பொருட்களின் பற்றாக்குறை இருப்பதாக அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களின் பாதுகாப்பைப் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி, அருகிலுள்ள பொது நலத்துறை அலுவலகத்தின் மூலம் தங்களின் உதவிகளை வழங்க வேண்டும் என்ற அழைப்பையும் இஸ்மாயில் மீண்டும் வலியுறுத்தினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பரவலான ஆட்சேபனைகளுக்கு பதிலளித்த இஸ்மாயில், தற்போதுள்ள நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.