கோவிட்-19 : சிலாங்கூரில் பாதிப்புகளில் பாதி, ஹுலு லங்காட்டைச் சேர்ந்தவை

சிலாங்கூரில் கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளில் பாதி, ஹுலு லங்காட்டில் இருந்து வருகிறது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“ஹுலு லங்காட்டில், மொத்த நேர்மறை பாதிப்புகள் 300 ஆகும்”.

துரிதமான பாதிப்பு கண்டறிதல் காரணமாக கோவிட்-19 எண்ணிக்கையில் உயர்வு

இதனிடையே, மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (enhanced movement control order (MCO)) கீழ் உள்ள பகுதிகளில் துரிதமான பாதிப்பு கண்டறிவதன் காரணமாக நாட்டில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“துரிதமான பாதிப்பு கண்டறிதல் இருப்பதால் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது”.

“நேற்றைய 208-லிருந்து இன்று 217-ஆக அதிகரிப்பு, மேம்பட்ட இயக்கம் கட்டுப்பாட்டு ஒழுங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒட்டுமொத்த சமூகத்தையும் சோதனையிடுவதால் அதிகரித்துள்ளன எனலாம்”.

“எடுத்துக்காட்டாக, சுங்கை லூயியில், நாங்கள் 41 தஹ்பிஸ் மாணவர்களை (நேர்மறையாக சோதிக்கப்பட்டவர்கள்) அழைத்துச் செல்ல முடிந்தது,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று, 217 புதிய பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,333-ஆக உள்ளன.

மூன்று பகுதிகள் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ளன. அவை கோலாலம்பூரில் உள்ள மெனாரா சிட்டி ஒன் காண்டோமினியம், ஹுலு லங்காட்டில் ஏழு கிராமங்கள் மற்றும் ஜோகூரின் சிம்பாங் ரெங்காமில் இரண்டு கிராமங்கள் அடங்கும்.

அடுத்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை வெகுஜனக் கூட்டங்கள் இருக்காது என்று நூர் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இரண்டு வாரங்களில் நீக்கப்படும் என்றாலும், நடைமுறைகள் மாறிவிட்டன, அவை இனி எப்போதும் போல் இருக்காது”.

“இப்போதைக்குள்ள நடைமுறைகள், கை குலுக்குதல் கூடாது, அடிக்கடி கைகளை கழுவுதல், கூடல் இடைவெளியை பின்பற்றுதல், வெகுஜன கூட்டங்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை” என்று அவர் கூறினார்.

அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களும், பொதுமக்களுடன் பழகும் முன்னணி பணியாளர்களும் மட்டுமே வாய் மூக்கு கவசங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று நூர் ஹிஷாம் மீண்டும் வலியுறுத்தினார்.

“மீதமுள்ளவர்களுக்கு, நீங்கள் ஒரு மீட்டர் வரை கூடல் இடைவெளியை கடைபிடிப்பது போதுமானது. ஆனால் நீங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க விரும்பினால் அது உங்களுடைய விருப்பம். நீங்கள் அணியலாம்” என்று அவர் கூறினார்.