பல அந்நியத் தொழிலாளர்கள் உணவு விநியோகத்தை இழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன

மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பல அந்நியத் தொழிலாளர்கள் உணவு விநியோகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு சேவை செயலகம் (Sekretariat Khidmat Imigran (SKI)) கூறியுள்ளது.

“அடிப்படை உணவு உதவி மிகவும் குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் உணவு வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றனர்” என்று SKI நிர்வாக இயக்குனர் நோர்டின் ஓத்மான் கூறினார்.

SKI தரவுகளின் அடிப்படையில், இந்தோனேசியா மற்றும் மெர்சி மலேசியாவின் அரசு சாரா நிறுவனங்கள் தேவைப்படுபவர்களுக்கு ஆரம்பகால நிவாரணங்களை வழங்கியுள்ளன என்று நோர்டின் விளக்கினார்.

“இதுவரை, 30 பேருக்கு மட்டுமே உதவி செய்யப்பட்டுள்ளது. எங்களிடம் நிதி இல்லை. தொடர்புடைய கட்சிகளுக்கு தகவல்களை சேகரித்து அனுப்பவே எங்களால் உதவ முடிகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு தூதரகம் உதவி வழங்குவது கடினம் என்பதை அவர் புரிந்துகொண்டார் என்று நோர்டின் கூறினார்.

“ஆனால் நாங்கள் அதை ஒரு மனிதாபிமான பார்வையில் பார்க்கிறோம்,” என்று நோர்டின் கூறினார்.

இதற்கிடையில், மலேசியாவின் தேசிய மனிதவள அமைப்பின் (புஸ்மா) தலைவர் ஜரீனா இஸ்மாயில், அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் போதுமான உதவி கிடைக்கவில்லை என்று கூறமுடியாது என்றார்.

“உதாரணமாக, வீட்டு பணிப்பெண்கள். வழக்கமாக அவர்கள் மலேசியாவில் சரியான ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தால், இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் அவர்களின் சேவைகள் தேவைப்படும் வரை அவர்கள் முதலாளியின் வீட்டில் தங்கியிருப்பார்கள்”.

“எனவே, அவர்கள் வெளியில் வசிப்பதால், உணவை சரியாகப் பெற முடியாது என்பது உண்மையல்ல. அவர்கள் முதலாளியிடமிருந்து ஓடிவிடாவிட்டால், இன்னும் அதே முதலாளியுடன் வேலை செய்கிறார்கள்,” என்று ஜரினா விளக்கினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய புஸ்மாவின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியதாகவும் ஜரினா கூறினார்.

“கட்டுமானம் அல்லது சுய வேலைவாய்ப்பு போன்ற தினசரி ஊதியம் வழங்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்”.

“ஊதியம் செலுத்தப்படவில்லை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவை விட்டு வெளியேற மார்ச் 21 அன்று போண்டியனில் உள்ள குகப் சர்வதேச படகு முனையத்தில் (Terminal Feri Antarabangsa Kukup, Pontian) வெளிநாட்டினர் கூடியிருந்தனர்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு காரில் ஒரு நபர் மற்றும் அடிப்படை தேவைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வணிக நடவடிக்கைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.