சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் மலேசிய தொழிலாளர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய விதி இலகுவாக்கப்படும்

நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை அகற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இருப்பினும், அவர்கள் முதலில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க சிங்கப்பூரில் ஒரு ‘ஸ்வாப் சோதனை’க்கு (‘swab test’) உட்படுத்தப்பட வேண்டும்.

“ஏப்ரல் 3ம் தேதி அமைச்சரவையின் சிறப்புக் குழு கூட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது மலேசியா திரும்ப விரும்பும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியத் தொழிலாளர்கள், சிங்கப்பூரில் ஒரு ‘ஸ்வாப் சோதனையை’ மேற்கொண்டு, கோவிட்-19 நோய் இல்லை என்ற கடிதம் / சான்றிதழை மலேசியா நுழைவு சாவடியில் கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் மலேசியாவில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

“நோய்க்கு சாதகமாக இல்லையென்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை” என்று குடிவரவு பணிப்பாளர் கைருல் டைமி டாவூட் ஏப்ரல் 3 தேதியிட்ட கடிதத்தில் ஜொகூர் குடிவரவுத் துறைக்கு தெரிவித்துள்ளார். மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, கைருல் கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தினார்.

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுபாடு உத்தரவின் கீழ், வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இந்த விதிமுறை நேற்று நடைமுறைக்கு வந்தது, ஆனால் சிங்கப்பூரிலிருந்து திரும்பும் மலேசியர்களுக்கு இவ்விதிமுறை இலகுவாக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று சங்கிலியை உடைக்க மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுபாடு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.

இது முதலில் மார்ச் 31 வரை நீடித்தது. ஆனால் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இதை ஏப்ரல் 14 வரை நீட்டிக்க முடிவு செய்தது.

நடமாட்டக் கட்டுபாடு உத்தரவு முழுவதும், அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் சேவைகள் மூடப்பட வேண்டும், அதே நேரத்தில் உணவுப் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இன்றுவரை, மலேசியாவில் 53 இறப்புகளுடன் 3,333 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை 827 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

உலகளவில், கிட்டத்தட்ட 1.1 மில்லியன் நேர்மறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 59,193 பேர் இறந்துள்ளனர்.