“அந்நிய தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான பிணிப்பாய்வு பரிசோதனையைத் தொடங்குவோம்” – சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு நாட்டிலுள்ள வெளிநாட்டு சமூகத்தின் மீது பெரிய அளவிலான கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது.

“நாங்கள் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்… நம் நாட்டு அந்நிய தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான பிணிப்பாய்வு பரிசோதனையைத் தொடங்குவோம்” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சிங்கப்பூர் இன்று 942 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களில், 14 பேர் மட்டுமே அந்நாட்டின் குடிமக்கள், மற்றவை வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்குடியரசில் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை என்று நூர் ஹிஷாம் கூறினார்.

சுகாதார அமைச்சின் வெகுஜன ஸ்கிரீனிங் சோதனைத் திட்டம் குறித்து அவர் கூறுகையில், கிளஸ்டர்கள் மற்றும் ஏராளமான பாதிப்பு இருக்கும் இடங்கள் என்ற அடிப்படையில் இலக்கு குழு தீர்மானிக்கப்படும் என்றார்.

அந்த இலக்கு குழுவில், நாடு முழுவதும் உள்ள தஃபிஸ் மாணவர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.