கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 43 மாணவர்கள் இந்தோனேசியாவிலிருந்து திரும்பியுள்ளனர்

ஏப்ரல் 16 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ) அனைத்துலக நுழைவாயிலில் புதிய கோவிட்-19 கிளஸ்டரை சுகாதார அமைச்சு வெற்றிகரமாக கண்டறிந்தது.

இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய மலேசிய மாணவர்கள் இந்த கிளஸ்டரில் சம்பந்தப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

“இந்தோனேசியாவின் மாகேட்டனில் (Magetan) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒன்றான டெம்போரோவிலிருந்து (Temboro) திரும்பிய 43 மாணவர்கள் இந்த கிளஸ்டரில் அடங்குவர்.

“மொத்தத்தில், 34 பேர் மலாக்கா மாநிலத்திலும், ஒன்பது பேர் கோலாலம்பூரிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று நூர் ஹிஷாம் கூறினார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் அனைத்து மலேசியர்களையும் தனிமைப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை சரியானது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது என்று நூர் ஹிஷாமின் கூறினார்.

“இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள் மலேசியா மக்களை பாதிக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இப்படி செய்யப்படுகிறது” என்று அவர் கூறினார்.