ரோஹிங்கியா அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் – பாஸ்

எல்லையை பாதுகாக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அதே வேளையில், ரோஹிங்கியா அகதிகளுக்கு அனுதாபம் காட்டுமாறு பாஸ் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகின்றனர்.

அகதிகள் எதிர்கொள்ளும் நிலைமையை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சியின் முகமட் காலீல் அப்துல் ஹாடி கூறியுள்ளார்.

“இன அழிப்பு, அகதிகளின் நிலைமை மற்றும் மனித கடத்தல் பிரச்சனைகள் குறித்து மலேசிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

“எல்லையை கட்டுப்படுத்தும் மலேசிய அரசாங்கம், அகதிகள் மீது இரக்கம் காட்டி, ஒரு நீண்டகால தீர்வை திட்டமிட வேண்டும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஏப்ரல் 16-ஆம் தேதி, ரோஹிங்கியா அகதிகளின் ஒரு படகு நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதை அடுத்து, ரோஹிங்கியா பிரச்சினை சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதே நேரத்தில், ரோஹிங்கியா அகதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க உதவுவதற்காக ஆசிய உறுப்பு நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு முகமட் காலீல் அழைப்பு விடுத்தார்.

இந்தச் செயல் மலேசியாவின் மியான்மர் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பின் (மெர்ரோம்) தலைவரான ஜாபர் அஹ்மத் அப்துல் கானியின் கவனத்தை ஈர்த்து, அவர் பின்னர் அகதிகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

மலேசியர்களை அவமதித்து, முழு குடியுரிமையை கோரியதாகவும் ஜாபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அது ஒரு தவறான குற்றச்சாட்டு என்றும் அவர் மறுத்தார்.