பேரங்காடி, நெடுஞ்சாலை ஓய்விடங்களில் சூராவ் மீண்டும் திறக்கப்படும்

அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓய்விடங்களில் உள்ள சூராவ் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்மாயில் சப்ரி, இப்போது அதிகமானோர் வணிக வளாகங்களுக்கு வருகை தருவதாலும், நாடு முழுவதும் பயணம் செய்வதற்கும் நாளை முதல் அனுமதிக்கப்படுவதாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

“சூராவில் தொழுகை செய்ய விரும்புவோர், சுய ஒழுக்கத்தையும் கூடல் இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

எஸ்ஓபி-களுக்கு உட்பட்டு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவுக் கடைகள் மற்றும் பிற வணிகங்களும் நாளை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

இதற்கிடையில், உணவகங்கள், உணவுக் கடைகள், மளிகைக் கடைகளுக்கான செயல்பாட்டு நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வணிகர்களை எச்சரித்தார்.

இசைப்பள்ளி இன்னும் தொழிலைத் தொடர முடியாது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார். வியாழக்கிழமை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விவகாரம் எழுப்பப்படும் என்றார்.