கோவிட்-19: முடிதிருத்துபவர் ஒருவர் கிருமியால் பாதிப்பு, உறுதிப்படுத்தியது சுகாதார அமைச்சு

பாகிஸ்தான் முடிதிருத்துபவர் ஒருவருக்கு கோவிட்-19 நேர்மறை பாதிப்பு இருப்பது குறித்து நேற்று கண்டறியப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தலைநகரில் ஒரு முடிதிருத்தும் கடையில் பணிபுரியும் அந்த நபர், சுற்றியுள்ள பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில் வீடு வீடாக சேவைகளை வழங்கியுள்ளார் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதல் கட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அந்த முடிதிருத்தும் கடை செயல்படவில்லை என்பது ஆரம்ப விசாரணையில் தெரிய வந்தது.”

“இருப்பினும், வாடிக்கையாளரின் வேண்டுகோளின் பேரில் அவர் வீடு வீடாக முடிதிருத்தும் சேவைகளை தொடர்ந்து வழங்கியுள்ளார்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி ஊடக மாநாட்டில் கூறினார்.